Thursday, 30 April 2015

பிளாஸ்டிக் அழியட்டும். தச்சர் வாழட்டும்.

சங்க காலத்திலிருந்தே தச்சுத் தொழில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அந்த வகையில் தச்சுத் தொழில் ஒரு குடும்பத் தொழிலாகும். மரபு வழியாக செய்து வரும் தொழில்களில் தச்சுத் தொழிலும் ஒன்று. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தச்சு வேலை செய்யும்போது இளையோர்கள் அதனை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு சிறு,சிறு வேலைகளை செய்ய கற்றுக்கொடுப்பார்கள்.
முதலில் இழைப்புளி இழுக்கச் சொல்வார்கள். இவ்வேலையை நன்றாக செய்தபிறகு உளியை தீட்டச் சொல்வார்கள். உளி தீட்டுவதற்கு நுணுக்கமும், கைபடிதலும் வேண்டும். பிறகு துளையை வருவை வைத்து துளைத்து போடச் சொல்வார்கள். பிறகு கூர் அடிக்கச் சொல்வார்கள். அதன் பிறகு இழைப்புளி தள்ளச் சொல்வார்கள். பிறகு மரத்தை வருவிப்போடச் சொல்வார்கள். மரத்தை வருவுவதற்கு நண்ணிய அறிவுத்திறனும் கணக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் மரத்தை ஒழுங்காக வருவிப்போட முடியும். பின்னர் மரத்தை இணைத்து ஆணி போட வேண்டும். இதுபோன்று அனைத்து வேலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு முழுமையான ஆசாரியை உருவாக்குவார்கள்.
தச்சுத் தொழிலை தச்சர்கள் மட்டுமே பரம்பரையாகச் செய்து வருகின்றனர். இத்தொழில் ஒரு தெய்வாம்சம் பொருந்தியத் தொழிலாகும். இத்தொழிலை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தச்சர்கள் மட்டுமே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.
தச்சுத் தொழிலை எவ்வளவு காலங்கள் கற்றாலும் ஒருசில வேலைகளைதான் கற்றுக் கொள்ள முடியும். வீடு வேலை செயப்வர்களுக்கு வீட்டில் உள்ள தளவாடச் சாமான்கள் செய்யத் தெரியாது. தளவாடச் சாமான்கள் செய்யத்தெரிந்தவர்களுக்கு வீடு கட்டத் தேவையான நிலை, கதவுகள் செய்யத் தெரியாது. இரண்டு வேலையும் தெரிந்தவர்களுக்கு பூ வேலைப்பாடுகள் செய்யத் தெரியாது. இதுபோன்று தனித்தனியேதான் வேலையைக் கற்றுக்கொள்வார்கள். அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டவர்கள் சுமார் 30 விழுக்காடுகள்தான் இருப்பார்கள். தச்சுத் தொழிலில் அனைத்து வேலைப்பாடுகளையும் கற்றுக் கொண்டவர்கள்தான் ஒரு முழுமையான ஆசாரியாக முடியும்.
முற்காலத்தில் தச்சர்களுக்கு மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் இருந்துள்ளது. கோயில் கட்டுமானப்பணிகள், தேர்பணிகள், கப்பல் கட்டும் பணிகள் முதலிய பல வேலைகளை தச்சர்களே செய்து சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்போது இரும்பு, உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருள்கள் வருகையாள் நகர்புறங்களில் வாழும் மக்கள் இப்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றர். இதன் காரணமாக மரத்தால் செய்யப்பட்ட உப்புப்பெட்டி, மர அலமாரி, முக்காலி, வடித்தட்டு, படி, மரக்கால் போன்ற பொருட்கள் புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. இதன் காரணங்களினால் தச்சுத்தொழில் செய்பவர்கள் வருமானமின்றி வறுமைக்கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றார்கள்.
தச்சர்களின் வாழ்க்கையும், தொழிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மரத்தாலான பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம்.ஆனால் இப்போது மரத்தின் பெருமையை மக்கள் உணரும் காலம் திரும்புகிறது.

No comments:

Post a Comment